தொடர் வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி



2024 ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை(Srilanka) அணி வெற்றிப்பெற்றுள்ளதுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்யைதினம் புதன்கிழமை (24) நடைபெற்ற பி குழுவுக்கான கடைசி மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தாய்லாந்தை(Thailand) எதிர்கொண்டது.

போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற தாய்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

தாய்லாந்து அணி 

தாய்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் நன்னாபட் கோன்ச்சாரோன்காய் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களைப் பெற்றார்.

அணித் தலைவி திப்பட்ச்சா புத்தாவொங் 13 ஓட்டங்களையும் அப்பிசரா சுவன்ச்சோன்ரதி 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி 

இதனைதொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 11.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 94 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.

அணித் தலைவி சமரி அத்தப்பத்து (Chamari Athapaththu) 35 பந்துகளில் 2 பௌண்டறிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 49 ஓட்டங்களுடனும் விஷ்மி குணரட்ன 39 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியுடன் பி குழுவிலிருந்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளதுடன் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடவுள்ளது.
Previous Post Next Post