இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 அண்மைய நாட்களில் நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை ஒட்டுமொத்த மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராதனை போதனா வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

பாடசாலை பிள்ளைகள் மட்டுமன்றி ஒட்டு மொத்த மக்களும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலான காலப்பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படுவதனை வரையறுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



தொற்றா நோய்களான நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடலை குளிர்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

எந்த வயதினைச் சேர்ந்தவர்களாயினும் தலைசுற்றல், தசை பிடிப்பு, வாந்தி, களைப்பு மற்றும் மயக்கம் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவ உதவிகளை நாட வேண்டுமென பேராசிரியா் டொக்டர் ரலபான தெரிவித்துள்ளார்.

அனைவரும் அதிகளவில் நீரை பருக வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளக்கூடிய உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் ஒட்டுமொத்த மக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous Post Next Post