இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளைக் கடத்திச் செல்ல முற்பட்ட மூவர் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது இன்று (10.06.2023) இடம்பெற்றுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் விஷேட அதிரப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே பீடி இலைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டியிலிருந்து - நீர்கொழும்பிற்கு பீடி இலைகளை லொறியொன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட போதே அவர்கள் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்ததாக பொலிஸ் விஷேட அதிரப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 36 உரைகள் அடங்கிய 1100 கிலோகிராம் பீடி கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை லுனுவில பகுதியைச் சேர்ந்த 34, மற்றும் 25 வயதுடைய இருவரும் கற்பிட்டி பள்ளிவாசல்துறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கம் மூலம் கற்பிட்டிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்துடன் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியெனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியவற்றை புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.